உதவி செய்யாமல் ஓடிய நண்பர், வேடிக்கை பார்த்த கூட்டம் விபத்தில் சிக்கி 1½ மணி நேரம் உயிருக்கு போராடிய கல்லூரி மாணவர் சாவு

உதவி செய்யாமல் ஓடிய நண்பர், வேடிக்கை பார்க்க திரண்டவர்கள் உதவி செய்ய முன்வராததால், விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் 1½ மணி நேரம் உயிருக்கு போராடி இறந்தார்.

Update: 2019-06-28 21:33 GMT
வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு ஆனந்த் நகரை சேர்ந்தவர் லட்சுமண் ராஜ்புரோகித் (வயது22). கல்லூரி மாணவர். இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பர் சைலேஷ் குப்தா (23) என்பவருடன் வெளியில் சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

சாதிவிலி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, திடீரென சாலையில் மோட்டார்சைக்கிள் சறுக்கியதில் இரண்டு பேரும் கீழே விழுந்தனர். இதில் லட்சுமண் ராஜ்புரோகித் பலத்த காயம் அடைந்தார். சைலேஷ் குப்தா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

லட்சுமண் ராஜ்புரோகித் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து பயந்து போன சைலேஷ் குப்தா அங்கிருந்து ஓடி விட்டார். இந்த நிலையில், விபத்தை பார்த்து அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். அவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.

லட்சுமண் ராஜ்புரோகித்தை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க ஒருவரும் முன்வரவில்லை. போலீசுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் தங்களது செல்போனில் அவரை படம் பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது, திடீரென பெய்த மழை காரணமாக மயக்கத்தில் இருந்து கண் விழித்த லட்சுமண் ராஜ்புரோகித் அங்கிருந்தவர்களிடம் தன்னை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படியும், தனது பெற்றோருக்கு செல்போனில் தகவல் கொடுக்கும்படியும் கெஞ்சியிருக்கிறார். அப்போது அவரை காப்பாற்ற ஒருவர் கூட முன்வரவில்லை

அதிக அளவில் ரத்தம் வெளியேறி சுமார் 1½ மணி நேரமாக உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் அவரை முதியவர் ஒருவர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

ஆனால் துரதிருஷ்டம் லட்சுமண் ராஜ்புரோகித் வழியிலேயே பரிதாபமாக உயிரிந்தார். தகவல் அறிந்து வந்த வாலிவ் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்