காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு பள்ளி ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-06-27 22:15 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், செந்தில்குமார், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பாரி, பாலகுமார், பொற்செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதுவையில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 478 பணியிடங்களையும், காரைக்கால் பள்ளிகளில் காலியாக உள்ள 260 பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். புதுவை, காரைக்கால் பகுதி பள்ளிகளில் காலியாக உள்ள நிர்வாக பதவிகளை முறையான பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நிர்வாகிகள் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மனுவை அளித்தனர்.

இதே போல் புதுச்சேரி மாநில ஆசிரியர் கூட்டமைப்பின் கவுரவ தலைவர் லட்சுமணசாமி தலைமையில் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேற்று கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடுவை முற்றுகையிட்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைத்து நிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலமாகவும் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்ப வேண்டும். கிராமப்புற ஆசிரியர்களை கலந்தாய்வு மூலம் பணி இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, அவர்களிடம் வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாதமே நேரடி நியமன அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்