தியாகதுருகம் அருகே மொபட் மீது கார் மோதல்; வாலிபர் சாவு

தியாகதுருகம் அருகே குடிநீர் எடுத்து வந்தபோது மொபட் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-06-02 23:00 GMT
கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் மணிவாசகம்(வயது 21). இவர் நேற்று காலை குடிநீர் எடுப்பதற்காக காலி குடங்களுடன் ஒரு மொபட்டில் அருகில் உள்ள ஜெயந்தி காலனி பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பொதுக்குழாயில் குடிநீர் பிடித்து கொண்டு மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். பெரியமாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று, கண்இமைக்கும் நேரத்தில் மணிவாசகம் ஓட்டிச் சென்ற மொபட் மீது பயங்கராக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மணிவாசகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்