காரிமங்கலம் அருகே துணிகரம் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு

காரிமங்கலம் அருகே நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உண்டியல் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-05-29 23:00 GMT
காரிமங்கலம்,

காரிமங்கலம் ஒன்றியம் பேகாரஅள்ளியில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு கடந்த மாதம் 17-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் தர்மபுரியை சேர்ந்த சபரி (வயது 40) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை கிராமமக்கள் கோவில் வழியாக சென்றனர். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் ஊர் பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கும்பாபிஷேகம் நடந்தவுடன் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. உண்டியலில் பல லட்சம் ரூபாய் இருந்து இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அப்போது நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டு மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். காரிமங்கலம் பகுதியில் மர்ம ஆசாமிகள் கோவில்களை குறி வைத்து தொடர்ந்து நகை, உண்டியல் பணத்தை திருடிச்செல்லும் துணிகர சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்