கோவையில் இருந்து சேலத்துக்கு அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் மாரடைப்பால் சாவு பஸ்சை ஓரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர்தப்பினர்

கோவையில் இருந்து சேலத்துக்கு அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்தார். பஸ்சை ஓரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2019-05-19 22:30 GMT
பெருமாநல்லூர்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சேலம் அயோத்தியாபட்டினம் அருந்ததி வீதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 50) சேலம் அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக கடந்த 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று சேலத்தில் இருந்து கோவைக்கு பஸ்சை ஒட்டிக்கொண்டு சென்றுவிட்டு மீண்டும் கோவையில் இருந்து சேலம் திரும்பி கொண்டிருந்தார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அவினாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே வலசுப்பாளையத்தில் பஸ்சை ஓட்டிக்கொண்டு வந்து போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பஸ்சை சாலையின் ஓரத்தில் நிறுத்திய அவர், தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளதாக கண்டக்டரிடம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து டிரைவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் சேலம் கொண்டு செல்லப்பட்டது.

தனது உயிரை கொடுத்து பஸ்சில் பயணம் செய்த பயணிகளின் உயிரை காப்பாற்றிய கடமை தவறாத அரசு பஸ் டிரைவரின் உடலுக்கு சக டிரைவர்களும், கண்டக்டர்களும் அஞ்சலி செலுத்தினர். கடந்த 11 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து துறையில் மிகவும் திறமையாகவும், நேர்மையாகவும் பணியாற்றி வந்த டிரைவர் இறக்கும் போதும் 50-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றி இருப்பது பெருமைக்குரியது என்று அவருடன் நீண்ட காலமாக பணியாற்றிய டிரைவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்