கொடுமுடியில் பரிதாபம் காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-03-17 22:30 GMT

கொடுமுடி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பெரியகலம் பகுதியை சேர்ந்தவர் சோளியப்பன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 19). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை ரமேஷ் தன்னுடைய உறவினர் ஒருவரின் மகனுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேசுவரர் கோவிலுக்கு வந்தார்.

பின்னர் அவர்கள் 2 பேரும் கொடுமுடி மணல்மேடு பகுதியில் செல்லும் காவிரி ஆற்றுக்கு குளிக்கச்சென்றனர். ரமேஷ் மட்டும் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் ரமேசை காப்பாற்ற முயன்றனர். எனினும் முடியவில்லை. இதனால் உடனடியாக இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ஆற்றில் மூழ்கிய ரமேசை தேடினார்கள். ரமேஷ் குளித்த இடத்தில் இருந்து சிறிது தொலைவில் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆற்றில் மூழ்கி இறந்த ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்