பெண் மீது திராவகம் வீசிய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை கவுரிபித்தனூர் கோர்ட்டு தீர்ப்பு

பெண் மீது திராவகம் வீசிய வழக்கில் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கவுரிபித்தனூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2019-02-20 21:16 GMT
கோலார் தங்கவயல்,

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா மஞ்சேனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட புத்தமாதனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமம்மா. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த ஆனந்த் ரெட்டி, ஸ்ரீதர் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், ஆனந்த் ரெட்டி மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் லட்சுமம்மா மீது திராவகத்தை வீசியுள்ளனர். இதில் லட்சுமம்மாவுக்கு முகம் சிதைந்தது.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினார். இதுதொடர்பான புகாரின்பேரில் மஞ்சேனஹள்ளி போலீசார் ஆனந்த் ரெட்டி மற்றும் ஸ்ரீதர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது கவுரிபித்தனூர் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.

தலா 10 ஆண்டு சிறை

இந்த வழக்கு கவுரிபித்தனூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி நடராஜ் தீர்ப்பு வழங்கினார்.

அதில், ஆனந்த் ரெட்டி மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் மீதான குற்றம் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராத தொகை ரூ.1 லட்சத்தை பாதிக்கப்பட்ட லட்சுமம்மாவுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்