பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு - 2 வாலிபர்கள் கைது

ஏர்வாடி அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-10 22:15 GMT
ஏர்வாடி, 

ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் கீழுர் நாடார் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் தினேஷ்குமார். 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வீட்டின் அருகே சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த அருண் (வயது 27) என்பவரின் வீட்டு நாய், 2 பேரையும் துரத்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும், அருணை கண்டித்ததாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த அறிந்த இசக்கிமுத்துவின் மற்றொரு மகன் பவுன்குமார் (18). அங்கு வந்து அருணிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அருண் மற்றும் அவருடைய உறவினர் அதே பகுதியை சேர்ந்த தர்மர் (22) ஆகியோர் சேர்ந்து பவுன்குமாரை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண் மற்றும் தர்மரை கைது செய்தனர். பவுன்குமார் வடக்கன்குளம் அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்