மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-13 22:00 GMT
பிராட்வே,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இருந்து பிராட்வே நோக்கி மாநகர பஸ் (தடம் எண்:592) கடந்த 11-ந்தேதி காலை வந்தது. வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் பஸ் வந்தபோது பஸ்சில் இருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் திடீரென மோதிக்கொண்டனர்.

இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுதொடர்பாக எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பஸ்சில் தகராறில் ஈடுபட்டு கண்ணாடியை உடைத்த மாணவர்கள் விவரம் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், பஸ் கண்ணாடியை உடைத்ததாக அம்பேத்கர் கல்லூரி மாணவர்களான சதீஷ் (வயது 18), விக்னேஷ் (19), தினேஷ் (18), அயூப் (19) மற்றும் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த விக்னேஷ் (18), பிரகாஷ் (19), ஜெயராம் (18) ஆகிய 7 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்