தாய் இறந்த துக்கத்தால் சோகம்: கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து வாலிபர் தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது

தாய் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாததால் கர்ப்பிணியுடன் சேர்ந்து கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அங்கிருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-12-12 23:15 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பாலையா கார்டன் பாரத் தெருவை சேர்ந்தவர் சாரதி (வயது 31). இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாரதியின் தாய் லலிதா இறந்துவிட்டார். தாய் இறந்ததில் இருந்தே சாரதி மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த ஜூலை மாதம் சாரதிக்கும், பிரசாந்தி (21) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இருப்பினும் தாய் இறந்த துக்கத்தில் இருந்து சாரதியால் மீண்டுவர முடியவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று காலை சாரதியின் செல்போனுக்கு அவரது அண்ணன் மணிபாலன் தொடர்பு கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. இதையடுத்து மணிபாலன் அவரது வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்.

கதவும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது சாரதியும், அவரது மனைவி பிரசாந்தியும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் கெங்கைராஜ், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கு சாரதி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. தாய் இறந்ததில் இருந்து அவரது நினைவாக உள்ளது. இதனால் சாக போகிறேன் என மனைவியிடம் கூறினேன். அதற்கு அவர், நீங்கள் செத்துவிட்டால் எனக்கு யாரும் இல்லை. உங்களுடன் சேர்ந்து நானும் சாகிறேன் என்றார். இதனால் நானும் என் மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறோம்’ என எழுதப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரசாந்தி 4 மாத கர்ப்பிணியாக இருந்ததும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தற்கொலை செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என ஒரு துண்டுச்சீட்டில் எழுதிப்போட்டு, அதில் ஒரு சீட்டை எடுத்து இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்