ஆவடி நகராட்சி அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்

ஆவடி நகராட்சி அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-06-03 23:00 GMT
ஆவடி,

ஆவடி பெரு நகராட்சி அலுவலகம் புதிய ராணுவ சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தை கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

நகராட்சி அலுவலக கட்டிடத்தின் கீழ் தளத்தில் கமிஷனர், என்ஜினீயர் பிரிவு, சுகாதார பிரிவு, பொதுப்பிரிவு, கணினி பிரிவு, சமுதாய அமைப்பாளர் பிரிவு, வரி செலுத்துதல் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேல் தளத்தில் வருவாய், நகரமைப்பு, இ-சேவை ஆகிய அலுவலகங்கள் செயல்படுகின்றன.

ஆவடி பெருநகராட்சியில் ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், கோவில்பதாகை, மிட்டனமல்லி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 48 வார்டுகள் உள்ளன. இந்த அலுவலகத்தில் ஆண், பெண் அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வருகின்றனர். நகராட்சி அலுவலகத்துக்கு தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்லும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. கழிவறையில் உள்ள குழாய்கள், மேற்கூரைகள் என அனைத்தும் உடைந்து கிடக்கிறது. இதனால் அலுவலக ஊழியர்கள், குறிப்பாக பெண் ஊழியர்கள் அலுவலக கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் மற்றும் என்ஜினீயரிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் பராமரிக்கப்படாமல் உள்ள கழிவறைகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. அங்கு மது அருந்தும் சமூக விரோதிகள் போதை தலைக்கேறியவுடன் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனர்.

மேலும், அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டு உள்ள நாற்காலிகள் உடைந்து கிடக்கிறது. இந்த நாற்காலிகளை பல மாதங்களாக ஒரு ஓரமாக போட்டு வைத்துள்ளனர். இதனால் அங்கு வரும் வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர்.

தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் குடிக்க குடிநீருக்காக மிகவும் கஷ்டப்படுகின்றனர். அலுவலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள குளிர்சாதன குடிநீர் தொட்டியும் பல மாதங்களாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்து கிடக்கிறது.

மேலும், அலுவலக முகப்பில் உள்ள பூங்கா பராமரிக்கப்படாமல் இருக்கிறது. அதில் உள்ள புல், மரங்கள் அனைத்தும் காய்ந்து கிடக்கிறது. பூங்காவுக்குள் நுழையும் மாடுகள் அங்கேயே மேய்ந்துவிட்டு படுத்துக்கொள்வதுடன் பூங்காவை அசுத்தம் செய்துவிடுகிறது. இதனை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

எனவே ஆவடி நகராட்சி அலுவலகத்தில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும் என்றும், பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்லும் அலுவலகத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்