காட்பாடியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

காட்பாடியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2017-12-30 23:00 GMT
காட்பாடி,

வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதி என்கிற கன்னியப்பன் (வயது 40). சொந்தமாக லாரி வைத்து அவரே ஓட்டி வந்தார். நேற்று இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேலூர் வழியாக கோவைக்கு சென்றார்.

காட்பாடி கல்புதூரில் உள்ள வணிகவரி சுங்கச்சாவடி அருகே வந்தபோது திடீர் என்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் கன்னியப்பன் சிக்கிக்கொண்டார்.

இதைபார்த்த பொதுமக்கள் விரைந்து சென்று அவரை மீட்க முயன்றனர். ஆனால் தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கன்னியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த கன்னியப்பனுக்கு புனிதா என்கிற மனைவியும், பவானி என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். 

மேலும் செய்திகள்