ஊட்டியில் சைக்கிள் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தற்போது சைக்கிள் பயணம்

Update: 2017-04-06 23:00 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளது. ஆண்டு முழுவதும் இங்கு ரம்மியமான காலநிலை நிலவுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களின் எல்லைபகுதியில் இந்த மாவட்டம் அமைந்து உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, அவலாஞ்சி, சிம்ஸ்பூங்கா, ரோஜா பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டு செல்கின்றனர்.

சைக்கிள் பயணம்

தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:– ஊட்டியில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க சைக்கிள் பயணம் உதவிகரமாக உள்ளது. மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சைக்கிள் பயணம் பாதுகாப்பாக உள்ளது. இதனால் இங்கு வாடகைக்கு சைக்கிள்களை எடுத்துக்கொண்டு வலம் வருகிறோம்.

ஊட்டியை பொறுத்தவரை கொண்டை ஊசி வளைவுகள், செங்குத்தான சாலைகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த சாலைகளில் சைக்கிள் பயணம் மேற்கொள்வது மிக சவாலாக உள்ளது. குறிப்பாக கல்லட்டி மலைப்பாதையில் சைக்கிள் பயணம் செய்வது மிக கடினமாக உள்ளது.

ஆர்வம்

இதுதவிர ஊட்டி–அவலாஞ்சி சாலை, ஊட்டி–கூடலூர் சாலை, தொட்டபெட்டா சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் நடுவே சைக்கிள் பயணம் மேற்கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிள் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்