திருப்பதி பிரம்மோற்சவ விழா: சிறிய சேஷ, ஹம்ச வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-10-05 23:18 GMT

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இரவு பெரிய சேஷ வாகன வீதி உலா நடைபெற்றது.

விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை 5 தலைகளை கொண்ட சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, 'புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி, மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, 'வீணை ஏந்திய சரஸ்வதி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை 2-வது நாள் ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்