நாகராஜா கோவிலில் குவிந்த பக்தர்கள்.. 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

மூலவரை தரிசனம் செய்வதற்கு ஒரு வரிசையும், நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு ஒரு வரிசையும் அமைக்கப்பட்டிருந்தது.

Update: 2024-08-25 12:16 GMT

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. கோவில் நடை திறக்கப்பட்டதையடுத்து காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறை என்பதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் நாகராஜரை தரிசிக்க வந்திருந்தனர்.

இதனால் நேரம் செல்ல செல்ல நாகராஜா கோவிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் மூலவரை தரிசனம் செய்வதற்கு ஒரு வரிசையும், நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு ஒரு வரிசையும் என தனித்தனி வரிசை அமைக்கப்பட்டிருந்தது.

நாகராஜரை தரிசிப்பதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவில் நுழைவு வாயிலை தாண்டி மெயின்ரோடு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆனால் இன்று பக்தர்களின் வருகை அதிகரித்ததால் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 2 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்