மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோவில் தயாராகும் ராட்சத கொழுக்கட்டை

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2024-09-06 02:50 GMT

திருச்சி,

தென் கயிலாயம் என்று போற்றப்படுவது திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில். மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மையும் எழுந்தருளியுள்ளனர். இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (சனிக்கிழமை) காலை 5 மணிக்கு கஜ பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தாயுமான சுவாமி கோவில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட 150 கிலோவிலான ராட்சத கொழுக்கட்டையை தொட்டிலில் கட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோவில் படையலிட்டு நைவேத்தியம் செய்யப்பட உள்ளது.

இந்த விழாவிற்காக 150 கிலோவில் மிகப்பிரமாண்டமான கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கொழுக்கட்டையை 24 மணி நேரம் ஆவியில் வேக வைத்து தயாரிப்பார்கள். தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இந்த ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்