உலகில் மாற்றத்தை கொண்டு வந்த பெண் விஞ்ஞானிகள்

புதிய கண்டுபிடிப்புகள் மனித வாழ்வை எளிதாக்குகின்றன. இதற்கு முக்கியமான காரண கர்த்தாக்கள் விஞ்ஞானிகள். இந்த வரிசையில் பல பெண்களும் இருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றி இங்கே காணலாம்

Update: 2022-02-28 05:30 GMT
மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற பழமொழிக்கு ஏற்றார்போல, ஒவ்வொரு நாளும் அன்றாட நடைமுறைகள் மாறுபடுகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் மனித வாழ்வை எளிதாக்குகின்றன. இதற்கு முக்கியமான காரண கர்த்தாக்கள் விஞ்ஞானிகள். இந்த வரிசையில் பல பெண்களும் இருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றி இங்கே காணலாம்:

1) ஜானகி அம்மாள்:
இந்தியாவின் முதல் பெண் தாவரவியல் நிபுணரான ஜானகி அம்மாள், இருபதாம் நூற்றாண்டில் கேரளாவில் பிறந்தவர். அமெரிக்காவில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார். அவரது ஆராய்ச்சியில் கரும்பு மற்றும் கத்தரிக்காய் பற்றிய ஆய்வுகளை உள்ளடக்கிய கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

ஜானகி அம்மாள் இங்கிலாந்து நாட்டில் பணியாற்றிய பொழுது கண்டுபிடித்த தாவரமான ‘மாக்னோலியா’வுக்கு, அந்த நாட்டு அரசாங்கம் ‘ஜானகி அம்மாள்' என பெயரிட்டது. டிராவிடோகெக்கோ ஜானகியே, சோனெரிலா ஜானகியானா, ஜானகியா அரையல்பத்ரா என பல தாவரங்களுக்கு அவரது பெயரை வைத்து கவுரவப்படுத்தியது. தாவரத் துறையில் ஜானகி அம்மாள் செய்த சாதனைகளுக்கு இந்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கியது.

2) பெட்டே நெஸ்மித் கிரஹாம்:
அமெரிக்க தட்டச்சர் மற்றும் வணிகக் கலைஞராக பணியாற்றியவர் பெட்டே நெஸ்மித் கிரஹாம். டெக்சாஸ் வங்கி மற்றும் அறக்கட்டளையில் செயலாள ராகவும் பணியாற்றினார். வங்கியில் பணியாற்றியதால் தட்டச்சு அடிப்பதில் பல தவறுகள் ஏற்பட்டது. இதனை சரிசெய்ய முதல் ‘திருத்தம் திரவத்தை’ கண்டுபிடித்தார். இவரது புரட்சிகரமான கண்டுபிடிப்பால் தட்டச்சு செய்யும்போது ஏற்படும் தவறுகள் சரி செய்யப்பட்டன.

3) ரேச்சல் சிம்மர்மேன்:
கனடாவில் பிறந்த விண்வெளி விஞ்ஞானி மற்றும் கண்டுபிடிப்பாளரான ரேச்சல் சிம்மர்மேன் 1984-ம் ஆண்டு ‘பிளிசிம்போல் பிரிண்டர்’ என்ற கருவியைக் கண்டுபிடித்தார். மாற்றுத்திறனாளிகள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த, அந்தப் பிரிண்டரில் உள்ள அச்சுப்பொறியில் இடம்பெற்ற சின்னங்களைத் தொட்டால் போதும். அதன் மூலம் அவர்களது எண்ணம் எழுதப்பட்ட உரையாக  மொழிபெயர்க்கப்படும்.

இளம் கண்டுபிடிப்பாளர்களின் சாதனைக்கான உலக கண்காட்சியில், பிளிசிம்போல் பிரிண்டருக்காக ரேச்சல் சிம்மர்மேன் வெள்ளிப் பதக்கத்தையும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ‘இளைஞர் சாதனை’ விருதையும் வென்றார்.

4) எஸ்தர் சான்ஸ் டேகுச்சி:
எஸ்தர் சான்ஸ் டேகுச்சி, அமெரிக்க ரசாயன பொறியாளர் மற்றும் விஞ்ஞானி ஆவார். இவர் ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் பயோமெடிக்கல் சாதனங்கள் பற்றிய ஆராய்ச்சியாளராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். எஸ்தர், இதயத் துடிப்பு சீராக இருப்பதற்காக மின் சாதனம் மூலமாக இயக்கப்படும் கருவியில் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் ‘லித்தியம்/சில்வர் வெனடியம் ஆக்சைடு’  பேட்டரி தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து சாதனை புரிந்தார். இந்த கண்டுபிடிப்புக்காக பல விருதுகள் வாங்கியுள்ளார்.

5) ஜெனிபர் டவுட்னா:
ஜெனிபர் டவுட்னா, அமெரிக்க உயிர் வேதியியலாளர் ஆவார். பாக்டீரியா நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டார். தனது சக ஆராய்ச்சியாளரோடு சேர்ந்து CRISPR-Cas9 என்ற புதிய நுண்ணுயிரை கண்டுபிடித்தார். இது உயிரியல் வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்