இளையராஜா பயோபிக்... திரைக்கதை, வசனம் எழுதும் பிரபல எழுத்தாளர்

இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதுகிறார்.

Update: 2024-10-05 16:20 GMT

சென்னை,

தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுத வெளியான படம்தான் 'அன்னக்கிளி'.இப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார்.இவரது 1,000-வது படம் இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை. இவர் 2010 ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் 2018 ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றார்.

இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். படத்தை தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட உள்ளது. ராக்கி, சாணி காயிதம் போன்ற திரைப்படங்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கிய திரைப்படங்கள் ஆகும். ரத்தம் தெறிக்கும் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இளையராஜா பயோபிக்கினை எப்படி இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் எழுதுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இந்த படத்தின் வசனத்தை எழுதுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் இணையப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுகிறேன். அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மூன்று மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார். திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து திரைக்கதை உருவாக்கப் பணியில் இணைந்து கொண்டேன்.

இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்று அவரது சொந்த வீடு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர் விளையாடி மகிழ்ந்த இரட்டை ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் கண்டோம். அத்துடன் ஊர்மக்களைச் சந்தித்து உரையாடினோம்.

இளையராஜாவின் பழைய நேர்காணல்கள், பத்திரிக்கைச் செய்திகள் அவரது பழைய புகைப்படங்கள், காணொளிகள் எனச் சேகரித்துக் கொண்டேன். அவர் குறித்து வெளியான தகவல்கள் மற்றும் தொடர் கட்டுரைகளைத் தேடித்தேடி வாசித்தேன். அவர் கடந்து வந்த பாதை வலியும் வேதனையும் நிரம்பியது. தமிழ் திரையிசையில் அவரது சாதனைகள் நிகரற்றவை. இசையின் மானுட வடிவமே இளையராஜா. 

அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம். இப்படம் அவரது திரைவாழ்வில் மிக முக்கியப் படமாக அமையும். இரண்டு மாத கால தொடர் விவாதங்களுக்குப் பிறகு திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசன வடிவை எழுதி இயக்குநருக்குக் கொடுத்துள்ளேன். அவரது திருத்தம் மற்றும் மாற்றங்களுக்குப் பின்பு திரைக்கதையின் இறுதி வடிவம் உருவாகும். இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த எனக்கு அவரது படத்தில் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது பெருமகிழ்ச்சியைத் தருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த 'பாபா' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமான எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், அதன்பிறகு 'சண்டக்கோழி', 'பீமா', 'மோதி விளையாடு', 'அவன் இவன்', 'இடம் பொருள் ஏவல்', 'ஜெயில்', 'எனிமி', 'அயோத்தி' உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்