அனன்யா காணாமல் போனது ஏன்?

நடிகை அனன்யா திடீரென்று காணாமல் போனார். இரண்டு ஆண்டுகளாக அவரை ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்க, ‘இதோ நான் வந்து விட்டேன்’ என்று மீண்டு வந்திருக்கிறார், அவர்.

Update: 2017-07-23 10:00 GMT
டிகை அனன்யா திடீரென்று காணாமல் போனார். இரண்டு ஆண்டுகளாக அவரை ரசிகர்கள் தேடிக்கொண்டிருக்க, ‘இதோ நான் வந்துவிட்டேன்’ என்று மீண்டு வந்திருக்கிறார், அவர். பிரபலமாக இருந்த அனன்யா காணாமல் போனதற்கான காரணம் என்ன? அவரிடமே கேட்போம்!

இத்தனை நாட்களாய் எங்கே இருந்தீர்கள்?

தெலுங்கில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். ‘அஆ’ என்ற தெலுங்கு படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக நடந்து கொண்டிருந்தது. அதற்காக ஐதராபாத்தில் இருந்தேன். மலையாளத்தில் நல்ல கதை கிடைத்தால் நடிக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தேன். டியான் என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

உங்கள் திருமணத்தை தொடர்ந்து பெற்றோரிடம் ஏற்பட்ட பிணக்கு தீர்ந்து விட்டதா?

சில நேரங்களில் நாம் எடுக்கும் முடிவு பெற்றோருக்கு கவலையை கொடுத்து விடுகிறது. நான் எடுத்த முடிவும் அப்படியாகி விட்டது. என்ன நடந்தாலும் நான் அவர்களது மகள். என்னை மறக்க அவர்களாலோ, அவர்களை மறக்க என்னாலோ முடியாது. இப்போது எல்லா பிணக்குகளும் தீர்ந்து அவர்கள் என்னோடு இணக்கமாகி விட்டார்கள். நான் ஷூட்டிங் போகும்போது அம்மாவும், தம்பியும் உடன் வருவார்கள். சமீபத்தில் நாங்கள் மூகாம்பிகை கோவிலுக்கு நேர்ச்சை வழிபாட்டிற்காக சென்றோம். நான் அங்கு பாடினேன். என் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியான நாளாக அது இருந்தது.

உங்கள் கணவர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகிறார்?

அவர்தான் எனது பலம். நான் சினிமாவை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும். அவர் நன்றாக சமைப்பார். சைவம் என்பதால் அதில் முத்திரை பதிப்பார். ‘ஆஞ்சனேயன் ஸ்பெஷல் ஸ்டூ’வை கப்பைகிழங்கில் தயாரிப்பார். திருச்சூரில் எங்கள் வீட்டில் இருக்கும்போது அவருக்கு பிடித்ததை எல்லாம் நான் தயார் செய்து கொடுப்பேன். ஒரு மனைவி என்ற முறையில் எனக்கு ஒருவேளை ‘பாஸ் மார்க்’தான் கிடைக்கும். ஆனால் அவர் 100-க்கு 90 மார்க் வாங்கும் நல்ல கணவர்.

எங்கேயும் எப்போதும் சினிமாவில் உங்களுக்கு கிடைத்த பெரும் வரவேற்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் எப்போதும் எந்த வாய்ப்பையும் தேடிப்போனதில்லை. அந்த வகையில் எனக்கு ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்லும் பெண்ணாக நடித்த அந்த கதாபாத்திரம் தமிழக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எனக்குரிய வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

சமூக வலைதள கருத்துப் பரிமாற்றங்களில் இருந்து நீங்கள் ஒதுங்கியிருப்பது ஏன்?


முதலில் நான் அதில் ரொம்ப ஆர்வமாக இருந்தேன். ஒருசில மோசமான அனுபவங்களால் அதில் இருந்து பின்வாங்கி விட்டேன் என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் நம் கருத்துக்கள் திரித்து, வளைத்து பொருள் கொள்ளப்படுகின்றன. அதனால் இப்போது அதில் பெரிய ஆர்வம் ஒன்றும் இல்லை.

உங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படும்போது முதலில் யாரை அழைப்பீர்கள்?

பெற்றோரும், தம்பியும் எனது பலம். நடிகர் இன்னசென்ட் அங்கிளிடம் அவ்வப்போது போனில் பேசுவேன். எவ்வளவு பிரச்சினை ஏற்பட்டாலும் எனக்கு தோள்கொடுப்பவர் என் கணவர். எந்த பிரச்சினை என்றாலும் அவர் என்னோடு இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

மேலும் செய்திகள்