சல்மான் கானை கொல்ல சதி: அரியானாவை சேர்ந்த ஒருவர் கைது

சல்மான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-10-17 11:05 GMT

File image

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை நவி மும்பையில் போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட சுகா என்பவர் அரியானாவில் உள்ள பானிபட்டில் இருந்து கைது செய்யப்பட்டதாகவும், அவர் அரியானாவை சேர்ந்தவர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். நவி மும்பைக்கு அழைத்து வரப்பட்ட அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக, நவி மும்பையின் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டுக்குச் செல்லும் வழியில் அவரைக் கொலை செய்வதற்காக கடந்த ஜூன் மாதத்தில் நடந்த சதி முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் பந்த்ராவில் உள்ள சல்மான்கானின் வீட்டுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தினைத் தொடர்ந்து இந்தச் சதி சம்பவம் நடந்தது.

அரியானாவை சேர்ந்த மாபியா கும்பலான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் கொல்லும் நோக்கத்துடன் தனது இல்லத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக நம்புவதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சல்மான் கான் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். அதேபோல, கடந்த ஜனவரி மாதத்தில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி பன்வாலில் உள்ள தனது பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக சல்மான் கான் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததாக சல்மான் கான் போலீசிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் சம்பத் நேஹ்ரா கும்பல்கள், சல்மான் கானை வேவு பார்க்கும் நோக்கத்துடன் அவரின் பந்த்ரா இல்லம், பான்வேல் பண்ணை வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் அவரின் நடமாட்டத்தை கண்காணிக்க 60 - 70 பேரை களமிறக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கானை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஏப்.24ம் தேதி பான்வேல் டவுன் போலீஸ் நிலையத்தில் பலர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்