'எமர்ஜென்சி' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ்.. உற்சாகத்தில் கங்கனா ரனாவத்

நடிகையும் இயக்குநருமான கங்கனா ரனாவத் ‘எமர்ஜென்சி’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

Update: 2024-10-17 14:40 GMT

மும்பை,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. எனினும் சீக்கிய அமைப்பினர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய தணிக்கை குழு படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதை எதிர்த்து படக்குழு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மனு மீதான விசாரணையில் தணிக்கை குழு சார்பில் ஆஜரான வக்கீல், படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நடிகை கங்கனா ரனாவத் ஒப்புக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் கங்கனா ரணாவத் கூறியதாவது, 'எங்களது எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்ற செய்தியினை மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம். ரிலீஸ் தேதி எப்போது என விரைவில் அறிவிக்கிறோம். ஆதரவுக்கும் பொறுமையாக காத்திருந்தமைக்கும் மிக்க நன்றி என்றார்.

'இந்திரா காந்தியை கொலை செய்ததை, பிந்தர்வாலேவை காட்டக்கூடாது, பஞ்சாப் கலவரங்களை காட்டக்கூடாதென்றும் தான் மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இவைகளைத் தவிர்த்துவிட்டு வேறு எதைக் காட்டுவதென எங்களுக்கு தெரியவில்லை. இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த நாட்டின் நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்' என கங்கனா கூறியிருந்தார். சீக்கியர்கள் குறித்து தவறாக காண்பிப்பதாக இந்தப் படத்தை வெளியடக்கூடாதென பலரும் மத்திய தணிக்கை வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

கங்கனா ரனாவத் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்