கம்பி வேலி திருடிய இரும்பு கடைக்காரர் உள்பட 4 பேர் கைது


தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி சிப்காட் பூங்காவில் கம்பி வேலி திருடிய இரும்பு கடைக்காரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சிப்காட் பூங்காவில் கம்பி வேலியை வெட்டி திருடி சென்ற இரும்பு கடைக்காரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கம்பி வேலி திருட்டு

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் உள்ள சிப்காட் பூங்காவில் கம்பிவேலி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கம்பிவேலியை மர்மநபர்கள் வெட்டி திருடி சென்று விட்டனர். இது குறித்து பூங்கா காவலாளி வெயிலுகந்தபெருமாள் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், தூத்துக்குடி மீளவிட்டானை சேர்ந்த முனியசாமி மகன் இசக்கிமுத்து (23), பெருமாள் மகன் சரண்ராஜ் (23), தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த பாக்கியராஜ் மகன் சிவலிங்கம் (23) ஆகியோர் மேற்படி சிப்காட் பூங்காவில் இருந்த கம்பி வேலியை திருடியது தெரிய வந்தது.

மேலும், இந்த கம்பி வேலியை அவர்கள் தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் சந்திரன் மகன் அய்யப்பன் (46) என்பவரின் பழைய இரும்பு கடையில் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

4 பேர் கைது

இதைத் தொடர்ந்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார், இசக்கிமுத்து, சரண்ராஜ், சிவலிங்கம் மற்றும் அய்யப்பன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள கம்பி வேலியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story