தமிழகத்திலேயே பிரதமர் குடியிருந்தாலும் பா.ஜனதா ஜெயிக்க முடியாது- உதயநிதி ஸ்டாலின் பேச்சு


தமிழகத்திலேயே பிரதமர் குடியிருந்தாலும் பா.ஜனதா ஜெயிக்க முடியாது- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x

கடந்த 2019-ல் எப்படி நாம் 39 தொகுதிகளில் ஜெயித்தோமோ அதேபோல், இந்த முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சேலம்,

தமிழகத்திலேயே பிரதமர் குடியிருந்தாலும் ஒரு தொகுதியில் கூட பா.ஜனதா ஜெயிக்க முடியாது என்று ஓமலூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி ஆதரித்து ஓமலூர் பஸ் நிலையம் பகுதியில் இன்று மாலை தி.மு.க.இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை பார்த்து அண்டை மாநிலமான கர்நாடகா, தெலுங்கனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை விட சமீபத்தில் ஒரு செய்தியை பார்த்து இருப்பீர்கள். அது என்னவன்றால் உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றான கனடாவில் திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

தமிழகத்திற்கு தேர்தல் வந்தால் மட்டுமே பிரதமர் அடிக்கடி வருகிறார். வரட்டும் நான் எதுவும் சொல்லவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இல்லை, அடுத்த 2026-ல் நடக்கும் சட்டமன்ற தேர்தல் வரையிலும் தமிழகத்திலேயே அவர் குடியிருந்தாலும் ஒரு தொகுதியில் கூட பா.ஜனதா ஜெயிக்க முடியாது. கடந்த 2019-ல் எப்படி நாம் 39 தொகுதிகளில் ஜெயித்தோமோ அதேபோல், இந்த முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியோ, எப்போது பார்த்தாலும் செங்கலை ஏன் காட்டுகிறீர்கள்? என்று கேட்கிறார். பதிலுக்கு நான் கேட்கிறேன், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் வரையில் நான் அந்த செங்கலை கொடுக்கமாட்டேன். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், யார் பிரதமர் வேட்பாளர், என்பதில் முக்கியம் இல்லை. யார் பிரதமராக வரக்கூடாது என்பது தான் முக்கியம் என்று பதில் தெரிவித்துள்ளார். நான் கேட்கிறேன், உங்களது பிரதமர் வேட்பாளர் யார்? என்று சொல்ல முடியுமா?. இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


Next Story