விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
விருதுநகர் அருகே, பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி கிராமத்தில் விருப்ப ஓய்வுபெற்ற போலீஸ்காரர் முருகேசனுக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. கடந்த 3-ம் தேதி காலை மருந்து கலக்கும் அறையில் மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டதால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. மருந்து கலவை வெடித்து சிதறியதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது.
அங்கு வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் முருகன் (வயது 40), சந்திரன் (30) ஆகியோர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். தொழிலாளி இருளப்பன் (38) இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், வெடி விபத்தில் தீக்காயம் அடைந்த இருளப்பன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story