நாடு முழுவதும் நீட் தேர்வு தொடக்கம்


தினத்தந்தி 5 May 2024 8:57 AM GMT (Updated: 5 May 2024 10:47 AM GMT)

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டு மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியுள்ள நீட் தேர்வு மாலை 5.20 மணிக்கு நிறைவடைகிறது.

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 24 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதி வருகின்றனர். தமிழ்நாட்டில் 1 லட்சத்து 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதி வருகின்றனர்.

ஹால்டிக்கெட் மற்றும் அடையாள சான்று இல்லாத மாணவர்களுக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தேர்வு மையங்களுக்குள் பேப்பர் துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேண்ட், தோள்பை, பிரேஸ்லெட், தொலைபேசி, மைக்ரோபோன், புளூடூத், இயர்போன், பெல்ட், பர்ஸ்கள், வாட்ச், ஆபரணங்கள், உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், எளிதில் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லலாம். தேர்வு தொடங்கி முதல் ஒரு மணிநேரம் மற்றும் கடைசி அரை மணிநேரம் மாணவர்கள் கழிவறை செல்ல அனுமதி கிடையாது. பாரம்பரிய மற்றும் கலாசார, மதம் சார்ந்த ஆடை உடுத்தி வருவோர், சோதனைகளுக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் சாதாரண செருப்பு, குறைந்த உயரம் உள்ள காலணிகள் அணிந்து வர அனுமதி உண்டு. ஷூ அணிந்து வர அனுமதி கிடையாது. தேர்வு முடியும் முன்பே விடைத்தாளை ஒப்படைத்துவிட்டு வெளியே வரக்கூடாது.

தேர்வு அறையில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க தேசிய தேர்வுகள் முகமை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்த 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story