7 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் ஆக்கி இந்தியா லீக்

7 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் ஆக்கி இந்தியா லீக் தொடர் நடைபெற உள்ளது.

Update: 2024-10-05 03:00 GMT

Image Courtesy: @HockeyIndiaLeag

புதுடெல்லி,

ஆக்கி இந்தியா அமைப்பு சார்பில் ஐ.பி.எல்., பாணியில் ஆக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் கடந்த 2013ல் தொடங்கப்பட்டது. இந்த தொடரில் ஆறு அணிகள் மோதின. கடைசியாக 2017-ல் நடைபெற்ற தொடரில் கலிங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அதன் பின்னர் இத்தொடர் நடக்கவில்லை. தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பின், இதன் 6-வது சீசன், வரும் டிசம்பர் 28ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதன் முறையாக பெண்களுக்கான தொடரும் நடத்தப்படுகிறது.

ஆண்கள் பிரிவு போட்டிகள் ரூர்கேலாவிலும் (ஒடிசா), பெண்கள் பிரிவு போட்டிகள் ராஞ்சியிலும் (ஜார்கண்ட்) நடைபெற உள்ளன. இதன் ஆண்கள் பிரிவில் சென்னை, லக்னோ, பஞ்சாப், மேற்கு வங்காளம், டெல்லி, ஒடிசா, ஐதராபாத், ராஞ்சி ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

அதேபோல் பெண்கள் பிரிவில் அரியானா, மேற்கு வங்காளம், டெல்லி, ஒடிசா ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இரண்டு அணிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எஞ்சிய அந்த 2 அணிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் வரும்13ம் தேதி முதல் 15ம் தேதி வரை டெல்லியில் நடக்கிறது. ஒவ்வொரு அணியில் 24 பேர் (16 இந்திய வீரர் - 8 வெளிநாட்டு வீரர்) இடம் பெறுவர். ரூ. 2 லட்சம், ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் என மூன்று பிரிவுகளில் ஆக்கி நட்சத்திரங்கள் ஏலத்தில் இடம் பெற உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்