ரோகித், விராட் கோலியை விளாசிய இந்திய முன்னாள் வீரர்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.

Update: 2024-10-28 11:51 GMT

மும்பை,

இந்தியா - நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் புனேயில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி, 2-வது போட்டியிலும் தோல்வியடைந்ததால் 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது.

இந்த தோல்விக்கு புனேயில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாதது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக பொறுப்புடன் செயல்பட வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாததே இந்த தடுமாற்றத்திற்கு காரணம் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் ஜோசி விமர்சித்துள்ளார். ஆனால் முந்தைய நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெறும் வரை அவ்வப்போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நாம் சுழல் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டோம். நம்முடைய ஸ்பின்னர்கள் சொந்த மண்ணில் வெற்றிகளை பெற்றுக் கொடுக்கிறார்கள். எனவே நமது பேட்ஸ்மேன்கள் எப்படி சுழலை எதிர்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். இங்கே நம்முடைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்களா? என்பதை பார்க்க வேண்டும்.

ஒருவேளை அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை எனில் ஸ்பின்னர்களையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியாது. முந்தைய காலங்களில் ஒவ்வொரு பெரிய நட்சத்திர வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவார்கள். ஆனால் இப்போதைய வீரர்கள் ஏன் விளையாடுவதில்லை? ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது அவ்வளவு சுலபமல்ல" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்