ரஞ்சி டிராபி; தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்... 'பாலோ ஆனை' சந்தித்த டெல்லி

டெல்லி அணி தனது முதல் இன்னிங்சில் 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

Update: 2024-10-21 06:05 GMT

Image Courtesy:@BCCIdomestic

டெல்லி,

நடப்பு சீசனுக்கான (2024-25) ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் டி பிரிவில் டெல்லியில் நடைபெற்று வரும் ஒரு ஆட்டத்தில் டெல்லி - தமிழகம் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் அபாரமாக செயல்பட்ட தமிழகம் 6 விக்கெட்டை இழந்து 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய டெல்லி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி தரப்பில் யாஷ் துல் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தன.

இதில் ஹர்ஷ் தியாகி 35 ரன், சனத் சங்வான் 36 ரன், ஜாண்டி சித்து 4 ரன், பிரணவ் ராஜுவன்ஷி 40 ரன், நவ்தீப் சைனி 26 ரன், ஹிம்மத் சிங் மற்றும் மயங்க் ராவத் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய யாஷ் துல் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் டெல்லி 97 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. டெல்லி தரப்பில் யாஷ் துல் 103 ரன்னுடனும், பிரஞ்சு விஜயரன் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தமிழகம் தரப்பில் குர்ஜப்நீத் சிங், எம்.முகமது, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், 410 ரன் பின்னிலையுடன் 4வது நாள் ஆட்டத்தை டெல்லி இன்று தொடங்கியது. இதில் டெல்லி தனது முதல் இன்னிங்சில் 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ ஆனை சந்தித்தது. டெல்லி முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக யாஷ் துல் 105 ரன் எடுத்தார். தமிழகம் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 408 ரன் பின்னிலையுடன் டெல்லி தனது 2வது இன்னிங்சை தொடங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்