ரோகித் சர்மா மீது இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

Update: 2024-10-21 12:32 GMT

பெங்களூரு,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்டில் வெற்றி காண்பது 36 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக இந்த போட்டியின் கடைசி நாளில் 107 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய இடது கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்தனர். மறுபுறம் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகிலேயே இடது கை வீரர்களை அதிக முறை அவுட்டாக்கி உலக சாதனை படைத்துள்ளார். அதனால் அவரை கேப்டன் ரோகித் சர்மா விரைவாக பவுலிங் செய்ய வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதை செய்யாத அவர் சிராஜ், பும்ராவை பயன்படுத்தினார். அதில் பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய நிலையில் சிராஜ் தடுமாறினார்.

இந்நிலையில் உலகின் நம்பர் 1 ஸ்பின்னராக இருக்கும் அஸ்வினை எப்படி சரியாகப் பயன்படுத்துவது பற்றி ரோகித் சர்மா விளக்கம் கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் அஸ்வினை சரியாக பயன்படுத்தியிருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் உங்களுடைய முதன்மை பவுலரான அஸ்வினை நீங்கள் முடிந்தளவுக்கு அதிகமாக பந்து வீச வைக்க வேண்டும். சொல்லப்போனால் அஸ்வின் புதிய பந்தில் வீசுவாரா இல்லையா என்று நாம் விவாதித்தோம். ஏனெனில் அவர் புதிய பந்திலும் 4வது இன்னிங்சில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அதை செய்யாத ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் கண்டிப்பாக ஆச்சரியமாக அமைந்தது. கடைசியில் 2 ஓவர்கள் வீசிய அஸ்வின் அந்த 12 பந்துகளிலும் எதிரணி பேட்ஸ்மேன்களை 2 - 3 முறை திணறடித்தார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்