எமர்ஜிங் ஆசிய கோப்பை; பாகிஸ்தானுக்கு 184 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 44 ரன் எடுத்தார்.

Update: 2024-10-19 15:29 GMT

Image Courtesy: @ACCMedia1

அல் அமேரத்,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) கிரிக்கெட் தொடர் ஓமனில் நேற்று தொடங்கியது. அந்தத் தொடரில் இந்தியா ஏ அணி குரூப் - பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்தப் பிரிவில் பாகிஸ்தான் ஏ, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளும் இடம் பிடித்துள்ளது.

குரூப் ஏ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்த தொடரில் முதலாவதாக நடைபெறும் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோதும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' - பாகிஸ்தான் 'ஏ' அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர்.

இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அபிஷேக் சர்மா 22 பந்தில் 35 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 19 பந்தில் 36 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஜோடி சேர்ந்தனர். இதில் திலக் வர்மா ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுமுனையில் வதேரா 25 ரன், ஆயுஷ் பதோனி 2 ரன், ரமந்தீப் சிங் 17 ரன், நிஷாந்த் சிந்து 6 ரன் எடுத்து அவுட் ஆகினர். நிலைத்து நின்று ஆடிய திலக் வர்மா 44 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 44 ரன் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சுபியான் முகீம் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்