பார்டர் - கவாஸ்கர் கோப்பை: வெல்லப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? ஆடம் கில்கிறிஸ்ட் கணிப்பு

பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் வெற்றியாளரை கில்கிறிஸ்ட் கணித்துள்ளார்.

Update: 2024-08-20 23:15 GMT

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

ஆனால் கடந்த 2 தோல்விகளுக்காக இம்முறை இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணித்திருந்தார். அதே போல இந்தியாவை வீழ்த்த காத்திருப்பதாக கேப்டன் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சமீபத்தில் கூறியிருந்தனர்.

இந்நிலையில் உலகின் டாப் 2 அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இத்தொடரில் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் எப்படி வெல்ல வேண்டும் என்பதை இந்தியா தெரிந்து வைத்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். மறுபுறம் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை இந்தியாவை வீழ்த்தி தங்களை சாம்பியன் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளதாகவும் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

எனவே ஒரு ஆஸ்திரேலியராக இம்முறை தமது நாடு வெல்லும் என்று கணிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:- "அது அந்த 2 அணிகளுக்கும் மிகவும் கடினமான மற்றொரு தொடராக இருக்கும். ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் வலுவானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வெளிநாடுகளில் எப்படி வெல்ல வேண்டும் என்பது இந்தியாவுக்கு தெரியும். அவர்களுடைய வேகப்பந்து வீச்சு வரிசை உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கிறது.

அவர்கள் இங்குள்ள சூழ்நிலைகளில் கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் பந்து வீசுவார்கள். அவர்களிடம் திறமையான பேட்டிங் வரிசையும் உள்ளது. எனவே இந்தத் தொடர் மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது. இருப்பினும் இயற்கையாக நான் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு கொடுப்பேன். எனவே இம்முறை அவர்கள் வெற்றியின் பக்கம் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் அது மிகவும் நெருக்கமானதாக இருக்கும். அது போட்டி மிகுந்ததாக இருக்கும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்