நாடாளுமன்ற மக்களவை தேர்தல்; 64 கோடி பேர் வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையாளர் பெருமிதம்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட இரண்டரை மடங்கு அதிக வாக்காளர்கள் வாக்கை செலுத்தி உள்ளனர்.

Update: 2024-06-03 07:33 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு பின் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என தெரிவிக்கின்றன. இந்த கூட்டணி 350-க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள சூழலில், தேர்தல் ஆணையம் இன்று மதியம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டு உள்ளது.

இதன்படி, இன்று மதியம் 12.30 மணியளவில் செய்தியாளர்களுடனான இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. நாட்டின் தேர்தல் வரலாற்றில், தேர்தல் முடிவுகள் பற்றி தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது என்பது இதுவே முதல் முறையாகும்.

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவருடைய சமூக ஊடக தளத்தின் வழியே நேற்று வெளியிட்ட செய்தியொன்றில், ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன், 150 மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வழியே பேசினார் என தெரிவித்து இருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

இதுபற்றி நேற்று மாலைக்குள் விளக்கம் அளிக்கும்படி, அவரிடம் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. இதுபற்றிய உண்மையான தகவல் மற்றும் விவரங்களையும் கேட்டிருந்தது. இந்த சூழலில், தேர்தல் முடிவுகள் பற்றி தேர்தல் ஆணையம் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமார் இன்று மதியம் 12.30 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், எழுந்து நின்று கைதட்டி வாக்காளர்களுக்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

அவர் கூறும்போது, நடப்பு ஆண்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம். இந்த தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து இருக்கின்றனர்.

தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் என ஒன்றரை கோடி பேர் பணியில் ஈடுபட்டனர். பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்றனர். அதனை வெற்றியடைய செய்துள்ளனர். மொத்தம் 64 கோடி பேர் வாக்களித்து உள்ளனர்.

இந்த தேர்தலில், 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட இரண்டரை மடங்கு அதிக வாக்காளர்கள் வாக்கை செலுத்தி உள்ளனர். தேர்தலுக்காக 135 சிறப்பு ரெயில்கள் விடப்பட்டு இருந்தன. 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் தொடர்பாக முதன்முறையாக 100 சுற்றறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்