தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதம் மட்டும்தான்: அண்ணாமலை

தி.மு.க. தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டதாக அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2024-03-20 07:25 GMT

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்ற நிலையில், இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கொடுத்த 99 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது.

தி.மு.க. தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா?

இது போக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறது தி.மு.க.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், தி.மு.க.வின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் தி.மு.க.வின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்