தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை

தருமபுரி தொகுதியில் காலை முதல் முன்னிலை வகித்த பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை பின்னுக்கு தள்ளி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி முன்னிலை பெற்றுள்ளார்.

Update: 2024-06-04 10:30 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பின்னடைவில் இருந்த விருதுநகர் மற்றும் தருமபுரி தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தருமபுரி தொகுதியில் காலை முதல் முன்னிலை வகித்த பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை பின்னுக்கு தள்ளி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி முன்னிலை பெற்றுள்ளார். ஆ.மணி 3.02 லட்சம் வாக்குகள் பெற்று 7,916 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். சவுமியா அன்புமணி 2.94 லட்சம் வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

விருதுநகர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2.31 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகர் 2.24 லட்சம் வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். விஜய பிரபாகரை விட மாணிக்கம் தாகூர் 7,639 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்