காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் ராணுவ ஒத்துழைப்பு ரத்து - இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் ராணுவ ஒத்துழைப்பை ரத்து செய்ய நேரிடும் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-10-16 02:39 GMT

வாஷிங்டன்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் காசா பகுதியில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இந்த போரால் காசாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

இதற்கிடையில், காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வந்த அங்குள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என இஸ்ரேல் அரசிடம் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ராணுவ ஒத்துழைப்பு ரத்து செய்யப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோனி பிளிங்கன் கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில், காசாவின் நிலையில் விரைவான மாற்றத்தை காண வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

காசாவிற்குள் சில மனிதாபிமான உதவிகள் சென்றடைந்தாலும், அவை போதுமானதாக இல்லை. நாங்கள் விரைவான மாற்றத்தை காண விரும்புகிறோம். ஒரு மாதத்திற்குள் காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால், இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ராணுவ ஒத்துழைப்பு ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட விளைவுகளை சந்திக்க நேரிடலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்