ரஷியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷியா சென்றடைந்தார்.

Update: 2024-10-22 09:38 GMT

மாஸ்கோ,

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், 'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' ஆகும்.மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சினைகள் குறித்து தலைவா்கள் கலந்துரையாட உள்ளனா்.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ரஷியாவின் கசானுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மந்திரிகளும் உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். விமான நிலையத்தில் பிரதமர் மோடி வந்தபோது, அங்கு குவிந்திருந்த ரஷியர்களில் சிலர் கிருஷ்ண பஜனை பாடல்களைப் பாடி அசத்தினர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில்,

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக கசானுக்கு வந்தடைந்தேன். இது ஒரு முக்கியமான உச்சிமாநாடு. இங்கே நடைபெறும் விவாதங்கள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சிறந்த பங்களிப்பாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்