சிரியாவில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொல்லப்பட்டார்.

Update: 2024-10-21 21:28 GMT

 

டமாஸ்கஸ்,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், சிரியா, ஈராகில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கசில் இஸ்ரேல் இன்று வான்வழி தாக்குதல் நடத்தியது. டமாஸ்கஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் காரில் இருந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி உள்பட 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட நபர் ஈரானில் இருந்து லெபனானுக்கு ஆயுதங்களை கடத்தி வரும் பிரிவின் தளபதியாக செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்