இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: "இது ஆபத்தை அதிகரிக்கும்" - ஆஸ்திரேலிய பிரதமர் கண்டனம்

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-02 00:18 GMT

கோப்புப்படம்

கான்பெரா,

லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும், ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த 2 அமைப்புகளும் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளாகும். இது தவிர சிரியாவின் எல்லையோர பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஈரான் ஆதரவு ஆயுத குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரானில் இருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் படுகொலை செய்தது. தங்கள் மண்ணில் நிகழ்த்தப்பட்ட இந்த கொலைக்கு இஸ்ரேலை பழிதீர்ப்போம் என ஈரான் சூளுரைத்தது. எனினும் இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் எதையும் நடத்தவில்லை.

இதனிடையே கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் நஸ்ரல்லாவுடன் இருந்த ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் என்பவரும் கொல்லப்பட்டார். இதனையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று இரவு இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது. ஒரே சமயத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் உருவானது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வான்தாக்குதல் குறித்து எச்சரிக்கும் சைரன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.

மேலும் மக்கள் அனைவரும் அருகில் உள்ள பதுங்கு குழிகளில் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி செல்போன் மூலமும், தொலைக்காட்சி வாயிலாகவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஈரானின் ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.

இந்நிலையில் இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை ஆஸ்திரேலியா கண்டிக்கிறது. இது மிகவும் ஆபத்தான விரிவாக்கம். ஆஸ்திரேலியாவும் உலக சமூகமும் தங்கள் கோரிக்கைகளில் தெளிவாக உள்ளன. பகைமை பொதுமக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். இஸ்ரேலில் உள்ள ஆஸ்திரேலியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும்" என்று அதில் அந்தோணி அல்பானீஸ் பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்