மீட்கும் போது கொத்திய ராஜநாகம்: சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் உயிரிழந்த சோகம்
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, பாம்பு பிடி வீரர் சந்தோஷ் அங்கு சென்று பாம்பை பிடிக்க முயன்றார். அந்த பகுதியில் புகுந்த பாம்பு கடும் விஷமுள்ள ராஜ நாகம் என்பது தெரியவந்தது.
சந்தோஷ் கடந்த 20 ஆண்டுகளாக கோவை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகும் நாகம் உள்ளிட்ட பல விஷ பாம்புகளை பிடித்து வனப் பகுதியில் விடுவித்து இருக்கிறார் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் அவர், அந்த பாம்பை பிடிக்க முயன்றபோது அது அவரை கடித்தது. பாம்பு கடித்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் சந்தோஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.