தமிழர்களை எள்ளி நகையாடும் மத்திய அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கனிமொழி எம்.பி.
தமிழர்களை எள்ளி நகையாடும் மத்திய அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.;

சென்னை,
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான முதல்-மந்திரிகள் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 3 மாநில முதல்-மந்திரிகள், கர்நாடக துணை முதல்-மந்திரி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "அரசியல் ஆதாயத்திற்காக தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையை தி.மு.க. கிளப்புகிறது என்றும் 2026-ம் ஆண்டுக்கு இந்த பணி முடிய சாத்தியமில்லை. எனவே 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு காலக்கெடு முடிந்தாலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாது என்றும் கூறினார்.
இந்த நிலையில், மத்திய மந்திரிக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?. தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.