தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவரும் கவர்னருக்கு கண்டனம் - திருமாவளவன்

கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Update: 2024-10-18 19:22 GMT

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 'இந்தி மாத' கொண்டாட்ட நிறைவு விழாவில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளார். அந்நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்னும் வரி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது.

இது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான கவர்னரின் வெறுப்பு உளநிலையை உறுதிப்படுத்துகிறது. கவர்னரின் இத்தகைய போக்கு கண்டனத்துக்குரியது. ஏற்கெனவே, பொதிகை என்னும் பெயரை நீக்கியது, தொலைக்காட்சியின் இலச்சினையை காவி நிறத்துக்கு மாற்றியது என தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவரும் பா.ஜ.க. அரசையும்; கவர்னர் ஆர்.என்.ரவியையும் வி.சி.க. சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்