பரவலான திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக பட்ஜெட் குறித்து தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.;

சென்னை,
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இந்தநிலையில், தமிழக பட்ஜெட் குறித்து தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற உயரிய லட்சியத்தோடு தமிழ்நாட்டிற்கான பரவலான திட்டங்களை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இன்று (நேற்று) பங்கேற்றோம்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கழக எம்.எல்.ஏ.க்கள் ஆற்ற வேண்டிய பணிகள், தொகுதி மக்களின் ஏற்றத்துக்கும் - தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குமான பங்களிப்பை ஒட்டி முதல்-அமைச்சர் அவர்கள் இக்கூட்டத்தில் வாயிலாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.