10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்: மாணவர்கள் சாதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்கி அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.;

கோப்புப்படம்
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதேபோல், பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த 5-ந்தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவடைகிறது.
இதனைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத இருக்கிறார்கள்.
இதற்காக மாநிலம் முழுவதும் 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48,426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4,858 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இரு மாநிலங்களிலும் 4,113 மையங்களில் 9 லட்சத்து 13,036 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுதான் மாணவ, மாணவியர் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வு ஆகும். எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு அடித்தளம் அமைப்பது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுதான். எனவே, மாணவர்கள் நன்கு படித்து, வினாக்களை புரிந்து கொண்டு பதட்டமின்றி விடைகளை எழுத வேண்டும்; 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் சாதிக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.