தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி சேர்ப்பு
இதுவரை தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் அறிக்கை வெளியான நிலையில், தற்போது இந்தி மொழியிலும் அறிக்கை வெளியாகி உள்ளது.;

சென்னை,
தென் இந்தியாவில் கேரளா, ஆந்திரா ஆகிய மாவட்டங்களில் ஆங்கிலத்துடன் வெளிவந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் முதன் முறையாக இந்தி மொழியுடன் சேர்த்து வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தொடர்பாக சர்ச்சையாகி வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் சென்னை இணையதள பக்கத்தில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.
வழக்கமாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் மட்டுமே இடம்பெறும். தற்போது இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா கூறியிருப்பதாவது:-
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியை சேர்க்க இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்திய வானிலை மைய அதிகாரிகள் அறிவுறுத்தலால், இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியில் முன்னறிவிப்பு வெளியிட சென்னை மையத்தில் மொழிபெயர்ப்பாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே மும்மொழிக்கொள்கை மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கும் சூழலில், தற்போது மத்திய அரசு சார்பில் இந்திமொழியை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.