சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Update: 2024-06-06 14:55 GMT

 தென் மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இது மட்டுமல்லாமல், வெப்பசலனம் காரணமாகவும் மழை கொட்டுகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 3 தினங்களாகவே மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. காலையில் இருந்து மாலை வரை வெயில் கொளுத்துவதும், பின்னர் மாலைக்கு பிறகு கரு மேகங்கள் சூழ்ந்து மழை கொட்டுவதுமான நிலை நீடிக்கிறது.அதன்படி, இன்று பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும், மாலையில் அப்படியே சீதோஷ்ண நிலை மாறி, கருமேகங்கள் சென்னையில் சூழத் தொடங்கியது.

சரியாக இரவு 7.30 மணிக்கு மேல் சென்னையில் பல இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. ஆரம்பத்தில் மிதமான மழையாக பெய்தது. அதன் பின்னர் 'டமால்... டுமீல்...' என இடி, மின்னலுடன் கனமழை பொளந்து கட்டியது.சென்னை எழும்பூர், காசிமேடு, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை போன்ற இடங்களிலும், குறிப்பாக மயிலாப்பூர், தென் சென்னையில் பல இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது.இந்த திடீர் கனமழையால் சென்னையில் பல இடங்களில் சாலைகளில் ஆறுபோல் தண்ணீர் ஓடின. தாழ்வான இடங்கள் உள்பட சில இடங்களில் குளங்களில் தேங்கி கிடக்கும் நீர் போல மழை நீர் தேங்கி கிடந்ததையும் பார்க்க முடிந்தது. சுமார் 30 முதல் 45 நிமிடம் வரை கனமழை நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்