சிப்காட் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை திறந்துவைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.

Update: 2024-08-17 13:59 GMT

காஞ்சிபுரம்,

பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.

20 ஏக்கர் பரப்பளவில் 13 குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும் 10 மாடிகளை கொண்டது. ஒவ்வொரு குடியிருப்பிலும் 10 மாடிகளுடன் 240 அறைகள் உள்பட பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சோலார் மின்சார வசதி, மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில் ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்