மறுசீரமைப்பு பணி 2 ஆண்டில் நிறைவடையும்

புதுச்சேரி ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி 2 ஆண்டில் நிறைவடையும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2023-08-25 17:55 GMT

புதுச்சேரி

புதுச்சேரி ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி 2 ஆண்டில் நிறைவடையும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

ரூ.93 கோடியில் மறுசீரமைப்பு

நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில், ரெயில்நிலையங்களை மேம்படுத்த அம்ரித் பாரத் ரெயில்நிலையம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத்திட்டத்தின் கீழ், தெற்கு ரெயில்வேயில் உள்ள 25 ரெயில் நிலையங்கள் ரூ.616 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 18 நிலையங்களும், கேரள மாநிலத்தில் 5, கர்நாடகா, புதுச்சேரியில் தலா ஒரு நிலையமும் மேம்படுத்தப்பட உள்ளன. இதில், புதுச்சேரி ரெயில்நிலையத்தை ரூ.93 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணி சீரான வேகத்தில் நடந்து வருகிறது.

நாடு முழுவதும் நடக்கும் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகளை சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். புதுச்சேரி ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மேம்பாட்டு பணிக்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2 ஆண்டில் முடிவடையும்

புதுச்சேரி ரெயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் வகையில் முழுமையாக புதுப்பிக்கப்பட உள்ளது. தற்போது செயல்பாட்டு கட்டிடம், பார்சல் அலுவலகம், ஓய்வு அறை, துணைநிலையம், திட்ட மேலாண்மை தள அலுவலகம் உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ளது.

மீதம் உள்ள பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரெயில்நிலையத்தில் 2 முனையங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நெரிசலை தவிர்க்கவும், பயணிகளுக்கான வசதியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு மறுசீரமைப்பு பணி நடந்துவருகிறது. இதேபோல, வாகனங்கள் நிறுத்தவும் போதிய வசதிகள் அமைக்கப்பட உள்ளது. மறுசீரமைக்கப்படும் பணி முடிந்தவுடன் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தடையின்றி போக்குவரத்து இணைப்பு கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்