புதுவை அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

புதுவையில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-18 17:00 GMT

புதுச்சேரி

புதுவையில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. .

அரசு சார்பு நிறுவனம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். புதுவை அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே போனஸ் அறிவிக்கப்பட்டு அவர்களது வங்கிக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு எப்போது போனஸ் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது. பல்வேறு அரசு சார்பு நிறுவனங்கள் மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் போனஸ் கிடைக்குமா? என்று கேள்வியும் எழுந்தது.

கடந்த ஆண்டைப்போல்...

இந்தநிலையில் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் இதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் தங்களிடம் உள்ள நிதியைக்கொண்டு போனஸ் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த போனஸ் மற்றும் கருணைத்தொகையானது கடந்த நிதியாண்டைவிட அதிகமாக இருக்கக்கூடாது. இதற்காக அரசு கூடுதல் நிதி வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் புதுவை அரசு சார்பு நிறுவனம், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தலா ரூ.11 ஆயிரம் போனஸ் கிடைக்கும். இதன்மூலம் 10 ஆயிரம் ஊழியர்கள் பயனடைவார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்