தாய், மகள் மீது தாக்குதல்

அரியாங்குப்பத்தில் வீட்டை காலி செய்ய சொல்லி தாய், மகளை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-04 17:02 GMT

அரியாங்குப்பம்

புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் கோகுலவாணி (வயது 33). இவருக்கும் குருசுக்குப்பத்தை சேர்ந்த முனுசாமி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக கோகுலவாணி தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் தங்கி இருந்தார்.

கடந்த ஆண்டு அவரது தாயார் இறந்துபோன நிலையில், அவரது அண்ணன் சுபாஷ், கோகுலவாணியிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறி தகராறு செய்தார். சம்பவத்தன்று இரவு கோகுலவாணி தனது மகளுடன் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது அங்கு வந்த சுபாஷ், அவரது மனைவி பிரதிபா ஆகியோர் கோகுலவாணியையும், அவரது மகளையும் திட்டி, தாக்கினர். மேலும் செல்போன்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் படுகாயம் அடைந்த கோகுலவாணி சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்