திருப்பதி லட்டு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கக்கோரி பாஜக மூத்த தலைவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2024-09-23 10:33 GMT

புதுடெல்லி,

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது குறித்து விசாரிக்க ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளார்.

இந்நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கோரியும், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கக்கோரியும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருப்பதி திருமலை கோவில் பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் பிற அழுகிய பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டதாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டை விசாரிக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்தேன்' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்து சேனா தலைவரும் விவசாயியுமான சுர்ஜித் சிங் யாதவ் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்